தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான மு. கருணாநிதி அவர்கள் இறந்த பின், திமுகவின் தலைவராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே உடன் பிறந்த அண்ணன்-தம்பி ஆனாலும், தந்தை இறந்த பின் பங்காளிகள் தான் என்ற சொல் வழக்கு தமிழகத்தில் உண்டு. கருணாநிதி அவர்களின் குடும்பம் பெரிய குடும்பம். அவருக்கு மூன்று மனைவிகள் என்பதால் பிள்ளைகள் பேரன்கள் என அதிக நபர்கள் உள்ள ஒரு குடும்பம்.
திமுகவிற்கு ஆதரவாக சன் குழுமம் மற்றும் கலைஞர் டிவி உள்ளிட்டவைகள் இருந்தாலும், முக ஸ்டாலின் அவர்களுக்கு என்று எந்த ஒரு தொலைக்காட்சியும் இல்லை. தனது உடன்பிறப்புகளை கவர்ந்து இழுக்கவும், தான் சொல்ல நினைப்பதை அவர்களுக்கு கொண்டு செல்ல ஒரு தனி தொலைக்காட்சி வேண்டும் என் முக ஸ்டாலின் அவர்கள் தலைவர் ஆனது முதல் திட்டமிட்டு வந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் தனது பெயரில் ஒரு தொலைக்காட்சியை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆம், தனது புதிய தொலைக்காட்சிக்காக, செய்தி ஆசிரியர் குழுவை உருவாக்கியுள்ளார். அந்தக் குழு ஸ்டாலின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஸ்டாலின், தொலைக்காட்சி தொடங்க உள்ளார் என்ற செய்திகள் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்திகள் அதனை உறுதி செய்துள்ளதாகவே உள்ளது.