பதறும் மக்கள்.. கலவரத்தை தூண்ட மீண்டும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி.!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதாக தற்போது 3 பேர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, தமிழக அரசு நியமித்த ஆணையர் மீது நம்பிக்கை இல்லை எனவே இத வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது.

இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். ஒருதரப்பினர் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

ஒரு தரப்பினர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று போராடுகின்றனர். இதனால் மக்களை ஏதோ ஒரு சக்தி தூண்டி விடுவதாக அரசு கருதுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், மாவட்டத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நேற்று ஶ்ரீவைகுண்டம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் போராட்ட உணர்வை தூண்டும் வகையில் சிலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனவும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களையும் கூறி வந்துள்ளனர். தூத்துக்குடி கலவரம் நடைபெற்ற பின்பு சில மாதங்கள் கழித்து மக்கள் அதிகாரம் அமைப்பு கேட்டதால் தான் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பலரும் கூறிய நிலையில், தற்போது இந்த கைது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.