மைத்திரியின் முடிவில் மாற்றம்! வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் வாங்கப்படலாம்!

கடந்த ஒக்டொபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவின் பிரகாரம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து அகற்றப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

ஆனால் புதிய பிரதமர் மஹிந்த தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் விடயத்தில் பெரும் சிக்கல் எழுந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவு உறுப்பினர்கள் பற்றாக்குறையாக இருந்த காரணத்தால் உறுப்பினர்களை கோடி கணக்கில் விலை கொடுத்து வாங்க முயன்றும் அதில் மஹிந்த தரப்பு படுதோல்வியடைந்தது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்லும் முடிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தள்ளப்பட்டார்.

பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்லும் அறிவித்தலை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி வெளியிட்டிருந்த சமயம் அதனை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டு கட்சிகள் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தன.

இதனை விசாரித்த நீதிபதிகள் குழு ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவின் மீது எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் பிரகாரம் மீண்டும் பாராளுமன்றம் கடந்த 14 ஆம் திகதி கூடியது. எனினும் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபாக்ச மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் காரணமாக இதுவரை பாராளுமன்றம் சுமுகமாக இயங்கவில்லை.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் மஹிந்த அரசின் பெரும்பான்மையை நிரூபித்ததன் பின்னர் புதிய சபாநாயகர் ஒருவரை நியமனம் செய்து எதிர்வரும் 2020 வரையில் புதிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல உள்ளதாக அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி விசாரணை செய்யும் முன்னர் ஜனாதிபதியினால் வாபஸ் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று (22) முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து கூறும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும் போது, பாராளுமன்றத்தை கலைத்து போது தேர்தல் என்றவுடன் எம்மை நோக்கி கட்சி தாவியவர்கள் மீண்டும் எம்மை விட்டு ஓடிவிட்டனர். ஆனால் எம்மிடம் 125 வரை பெரும்பான்மை ஆதரவு உள்ளது என தெரிவித்தார்.

ஆனால் இதுவரை பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பை நடத்த மஹிந்த தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.