புதுச்சேரியில் முகத்தில் பெருக்கல் குறியிட்டும், தலையில் வட்டமிட்டும் தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (72). இவரின் மனைவி ஹேமலதா (65). பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருக்கும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
பிள்ளைகள் அனைவரும் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் நிலையில் பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் அடுக்குமாடி வீட்டின் தரை தளத்தில் தனியாக வசித்து வந்திருக்கின்றனர்.
தினமும் காலையில் நண்பர் ஒருவருடன் பாலகிருஷ்ணன் வாக்கிங் செல்வார்.
அப்படி இன்று காலை அவர் வீட்டுக்கு நண்பர் சென்ற நிலையில் காலிங் பெல் அடித்தும் அவர் வெளியில் வரவில்லை.
பின்னர் நண்பர் வீட்டுக்குள் சென்று படுக்கையறையில் பார்த்த போது கட்டிலில் பாலகிருஷ்ணனும் அவரின் மனைவியும் கட்டிலின் இருபுறமும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் ஆய்வு செய்தனர்.
வீட்டில் நகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் அப்படியே இருப்பதால் அவைகளுக்காக கொலை நடந்ததாகத் தெரியவில்லை. அதேசமயம் வீட்டில் பல்வேறு இடங்களையும் அலசித் தேடிப் பார்த்தற்கான அடையாளங்கள் தெரிவதால் வேறு ஏதேனும் ஆவணங்களுக்காக கொலை நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.
ஹேமலதாவை அவர்கள் தலையணை வைத்துக் கொலை செய்துள்ளனர். ஆனால், பாலகிருஷ்ணனை அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளது
அதேபோல பாலகிருஷ்ணன், தன் மனைவி மற்றும் மகன்கள், மருமகளுடன் எடுத்த குரூப் போட்டோ ஒன்று லேமினேட் செய்யப்பட்டிருந்தது.
அதை எடுத்து பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி ஹேமலதா முகத்தில் பென்சிலால் பெருக்கல் குறியும், அவர்கள் பின்னால் நின்றிருக்கும் பெண்ணின் தலையில் வட்டமிட்டும், மற்றவர்கள் முகத்தில் டிக்கும் அடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேற்றப்பட்ட கொலையா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.