பா.ஜ.க தலைவர் மீது திடீர் வழக்கு.!

‘சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, தன்னிடம் கேட்டுவிட்டுத்தானே கோயில் நடையை அடைத்தார்’ என்று பேசிய கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் சபரிமலை போராட்டம் பற்றி பேசிய கேரள மாநில பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “சபரிமலை போராட்டம் என்பது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. பா.ஜ.க திட்டத்தின்படிதான் இந்தப் போராட்டம் நடக்கிறது.

சபரிமலை கோயில் நடை அக்டோபர் மாதம் திறக்க பட்டபோது, சில பெண்கள் அங்கு சென்றபோது, நடையை அடைக்கப்போவதாக தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கும் முன்பு அது பற்றி என்னுடன் ஆலோசித்தார். இவ்வாறு அறிவித்தால், அது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா என்று அவர் கேட்டதற்கு இந்த அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. நீங்கள் கவலைப்பட வேண்டாம், உங்கள் பின்னால் பா.ஜ.க நிற்கும் என்று தெரிவித்தேன்.

அதன் பின்புதான் அவர் தைரியமாக அதை அறிவித்தார். தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவிப்புக்குப் பிறகுதான் காவல்துறையினர் பின் வாங்கினர். கோயிலுக்குள் பெண்கள் வராமல் தடுக்கப்பட்டனர்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஸ்ரீதரன் பிள்ளையின் பேச்சுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு மறுப்பு தெரிவித்திருந்தார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கிடையே, ஸ்ரீதரன் பிள்ளையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷைபி என்பவர் கோழிக்கோடு போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கலவரத்தைத் தூண்டுதல் போன்ற, பிணையில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் கோழிக்கோடு காவல்துறையினர் ஸ்ரீதரன் பிள்ளை மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.