நீதிமன்ற தீர்ப்பை எடுத்து சொன்ன மனைவி: தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

திருமணத்திற்கு மீறிய உறவு குற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை தொடர்ந்து, மனைவியின் தலையில் கல்லைப் போடு கணவன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சளா  இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனின் நண்பர் ஜோதி அடிக்கடி மணிகண்டன் வீட்டிற்கு வந்து சென்றதில், ஜோதிக்கும், மஞ்சுளாவிற்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. மேலும் இருவரும் கணவருக்குத் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்றுள்ளனர். இதையறிந்த கணவர் மணிகண்டன் மனைவி மஞ்சுளாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ஆனால் மணிகண்டனுடன் சேர்ந்து வாழ பிடிக்காத மஞ்சுளா மீண்டும் ஜோதியுடன் ஆரல்வாய்மொழிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கோபமான மணிகண்டன் கடந்த 22ஆம் தேதி ஆரல்வாய்மொழியில் இருந்த மஞ்சுளாவையும், ஜோதியையும் அழைத்துக் கொண்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால் கணவருடன் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மஞ்சுளா, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பிடித்தவருடன் சேர்ந்து வாழலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன்  மஞ்சுளாவை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மஞ்சுளா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கோட்டார் காவல் நிலையத்தில் ஜோதி அளித்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.