தமிழகத்தின் பட்டுக்கோட்டையில் காவல் நிலையம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்து தலையை மட்டும் தனியாக துண்டித்து சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அந்தப் பகுதியில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த
ரவுடி தம்பா கார்த்தி என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் தனது நண்பர்களான அண்ணாத்துரை, வினோத், அஜித், ரமேஷ், முத்து உள்ளிட்ட 7 பேருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில், பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரையும் பொலிஸார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், நேற்று பிரகாஷ் உள்ளிட்ட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர். இதையடுத்து சம்பந்தபட்டவர்கள் அனைவரும் பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றுள்ளனர்.
தொடர்ந்து பிரகாஷ் உட்பட அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த 15-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் துரத்தியுள்ளது.
இதனையடுத்து நரியம்பாளையம் பகுதி மண் சாலையில் பிரகாஷ் மற்றும் உடன் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
இந்த நிலையில், பிரகாஷ் தவிர எஞ்சியவர்கள் தப்பிச் சென்று விட்டனர். பிரகாஷ் மட்டும் துரத்தி வந்தவர்களிடம் சிக்கிய நிலையில், மர்ம நபர்கள் பிரகாஷை வெட்டிக் கொலை செய்ததோடு தலையை தனியாக வெட்டி பட்டுக்கோட்டை – தஞ்சை சாலையில் உள்ள பாளையம் பகுதியிலும், உடலை வேறு இடத்திலும் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்த கொடூர குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.