திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவிக்கு கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி, மாணவியின் பெற்றோர்கள் பள்ளியில் நுழைந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கியதால் பெரும் பதற் றம் நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ள மேல்நாச்சிப் பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த மாதம் காலாண்டுத் தேர்வு நடந்து முடிந்தது.
காலாண்டு விடுமுறை தினத்தில் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
கணித ஆசிரியராக உள்ள கண்ணன் என்பவர் சிறப்பு வகுப்புக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவி சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் நின்றுள்ளார். விடுமுறை முடிந்து பள்ளி திறந்தபின்பும் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதுபற்றி பெற்றோர் விசாரித்தபோது, கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து கணித ஆசிரியரை, தலைமையாசிரியர் அறைக்கு அழைத்து வந்து பேசினர்.
அந்த அறையை விட்டு வெளியே போக முயன்றவரை இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். அவர் அதையும் மீறி செல்ல முயன்றதால், ஆசிரியரை தாக்கியுள்ளனர்.
பின்னர் ஆசிரியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.