இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய ராணுவ வீரர் கைது.!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் உத்தரகாண்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். ராணுவத்தின் உளவு பிரிவுக்கு சமீப காலமாக இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை ராணுவ உளவு பிரிவு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. இயக்கத்திற்காக உளவு பார்த்ததை உளவுப்பிரிவு கண்டுபிடித்தது. இதையடுத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ராணுவத்தில் அவர் பணிபுரிந்து வருவதும், பல ராணுவ ரகசியங்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் பல்வேறு இயக்கங்களுடன் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்து வரும் அவர், சமூக வலைத்தளம் மூலம் முக்கியமான ராணுவ ரகசியங்களை அவர்களுக்கு வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவரை காவலில் எடுத்துள்ள ராணுவ உளவுப் பிரிவினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.