சிறுமி பலாத்கார வழக்கு: 10 ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது காடுஉத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா (வயது 65). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறியதில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திம்மப்பா கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது போக்சோ சட்டபிரிவின்  கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மப்பாவிற்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.