டிரம்ப் மீதான ஆபாச வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன் மீது காதலில் இருந்ததாகவும், இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்ட்ரோமி நிறுத்தவில்லை. இந்நிலையில் டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு மனிதன் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக டேனியல் கூறினார்.

இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்சுக்கு தனது வழக்கறிஞர் பணம் வழங்கியது குறித்து தனக்கு தெரியாது என டிரம்ப் தெரிவித்து இருந்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக முதன்முதலில் டிரம்ப் பேசியுள்ளார். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக  இதை பற்றி பேசாமல் இருக்க ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக நடிகை தெரிவித்திருந்தார். ஏன் உங்கள் வழக்கறிஞர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் அவரைதான் கேட்க வேண்டும் என்றார் டிரம்ப்.

இந்நிலையில் டிரம்பிற்கு எதிராக ஸ்ட்ரோமி டேனியல்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிபதி எஸ் ஜேம்ஸ் ஒடெரோ, நேற்று தள்ளுபடி செய்தார். மேலும் டிரம்ப்பின் நீதி மன்ற செலவையும் செலுத்த ஆபாச நடிகைக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.