ஆட்சியை கலைக்க ஓபிஎஸ் போட்ட திட்டம்.! எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி.!!

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அதிமுக அரசியலில் புயலை கிளப்பும் விதமாக எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சியை கலைக்க ஓபிஎஸ் தன்னுடன் இரகசிய சந்திப்பு நடத்தியதாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அந்த பேட்டியில் ”கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன் படி அவரை சந்தித்தேன் என்றும், அப்போது அவர் என்னிடம், தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும். கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாக கூறினார்.

தினகரனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், தினகரன் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் என்றும், நான் தினகரனை சந்தித்தது உண்மைதான், அந்த சந்திப்பு தினகரனின் நண்பரின் விருப்பத்தின் பெயரிலே நடந்தது. அந்த சந்திப்பில் தினகரன் தான் எடப்பாடியை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தான் தினகரனை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ”மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன். நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் குழப்பத்தில் உள்ளார்” என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், ”துணை முதலமைச்சர்- தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டார்”என்று தெரிவித்துள்ளார்.