கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
இதனால் பழைய நோட்டுகளை மாற்று வதற்காக பொதுமக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். அப்போதும் சிலர் 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நோட்டு செல்லாது என்று வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பினர்.
அதன் பின்பு வங்கி அதிகாரிகள் விளக்கம் கொடுத்த போதும் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வரை 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்களும், வியாபாரிகளும் வாங்க மறுக்கின்றனர்.
தற்போது, புதிய 1000 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் வெளியிட உள்ளது என்றும் அதன் பின்பு 10 நாட்களுக்குள் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டை மாற்ற வேண்டும். இல்லை என்றால் அதன் பின்பு அந்த நோட்டுகள் செல்லாததாகி விடும் என்று பரபரப்பாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவி வருகிறது.
இதை பார்க்கும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இது பற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவது குறித்து எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. எனவே இந்த தகவல் உண்மை இல்லை. இது போன்ற வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் ரூ.2000 நோட்டை அச்சமின்றி பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.