தினமும் 3 செயின்! – மனைவி டார்ச்சரால் கம்பி எண்ணிய திருடன்

தினமும் 3 செயின் பறித்தால்தான் வீட்டுக்குள் அனுமதிக்கும் மனைவியால் , கணவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

பெங்களூரு அருகேயுள்ள கெங்னேரி  கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவரின் மனைவியின் பெயர் மகாதேவி. சிறிய திருட்டில் ஈடுபட்டுவந்த அக்யூத் குமார், ரியல் எஸ்டேட் அதிபர் எனக் கூறி மகாதேவியைத் திருமணம் செய்துள்ளார். சில நாள்களில், அக்யூத்குமாரின் பின்புலம் மகாதேவிக்குத் தெரியவந்தது. கணவரின் தொழிலைப் பற்றியெல்லாம் மகாதேவி கவலைப்படவில்லை.

கணவரிடம், ‘தினமும் 3 செயின் பறித்துக்கொண்டுதான் வீட்டுக்குள் வரவேண்டும்’  என்று மகாதேவி உத்தரவிட்டடார். அதன்படி                   3 செயின்கள் கொண்டு வரவில்லையென்றால், கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார். மனைவியின் டார்ச்சர் காரணமாக  திருமணம் முடிந்த 7 மாதங்களில், 106 செயின் பறிப்பில் அக்யூத் குமார் ஈடுபட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு, ரூ. 1.05 கோடி ஆகும்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன், கெங்னேரி போலீஸ் ஆக்யூத் குமாரை கைதுசெய்தது. விசாரணையில், மனைவியின் கொடுமையால் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாகத்  தெரிவித்துள்ளார்.

கணவர் போலீஸில் சிக்கியதும் தலைமறைவான மகாதேவி, மாண்டியா அருகிலுள்ள நாகமங்களா பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். சமீபத்தில் மகாதேவி  இருப்பிடத்தைக் கண்டுபிடித்த போலீஸா, அவரையும் கைதுசெய்தனர்.

பெங்களூரு,  தவனகரே, தார்வாட், ஹவேரி, தும்கூர் பகுதிகளில்தான் அக்யூத்குமார்  கைவரிசை காட்டியுள்ளார். செயின்களை விற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இரு சொகுசு கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் சொந்தமாக வைத்திருந்துள்ளனர்.

மகாதேவி அடிக்கடி கோவா சென்று, பெரிய பெரிய ஹோட்டல்களில் தங்கி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. சொகுசு வாழ்க்கைகுறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தெரியக் கூடாது என்பதற்காக, அடிக்கடி வீட்டையும் மாற்றி வந்துள்ளனர். தற்போது இருவருமே கம்பிகளுக்குப் பின்னால்.