நள்ளிரவில் வாலிபரை பெண்ணுக்கு கட்டாய திருமணம்!

திருப்பத்தூர் அருகே வாலிபரை கடத்தி நள்ளிரவில் மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் 5 பேரிடம் விசாரணை

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் இவரது மகன் சதீஸ்(21). இவர் திருப்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகள் சுமதி(17).(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  சதீசின்  பெற்றோர் அவரை கடும் எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக சதீஸ் சுமதியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சுமதி சதீஸ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சதீஸ் தனது வீட்டில் துாங்கி கொண்டு இருந்தபோது சக்கர குப்பத்தை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் சதீசை உடனே நீ எழுந்து வா என கூறி  சக்கரகுப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சுமதி மற்றும் அவரது குடும்பத்தினர் சதீஸ் வருகைக்காக காத்திருந்ததை அறிந்த சதீஸ் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் சதீசை அங்கு சுமதியின் கழுத்தில் தாலி கட்டச்சொல்லி அவரை மிரட்டி சுமதியின் கழுத்தில் கட்டாய தாலிகட்ட வைத்துள்ளனர்.பின்னர் இருவரையும் சுமதி குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தொடர்ந்து மறுநாள் காலை தனது மகனுக்கு கட்டாய திருமணம் நடைபெற்றதை அறிந்த சதீசின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக சுமதியின் குடும்பத்தினரிடம் இருந்து தங்கள் மகனை மீட்டுத்தர கோரி சதீசின் தந்தை ஜோலார்பேட்டை போலீசில் புகாரளித்தார்.அதன் பேரில் போலீசார் இது தொடர்பாக விசாரித்து 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, வருகின்றனர். மேலும் இது தொடர்பாக திருப்பத்துார் சப் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.வாலிபரை கடத்தி மைனர் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவர் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.