ஆவாவின் கோட்டைகளான நான்கு பிரதேசங்கள்!

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புப் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழரசுக்கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகளிற்கும், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிசாருக்குமிடையிலான கலந்துரையாடலாக முடிந்துள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர்கள் இ.ஜெயசேகரம், கே.சயந்தன் மற்றும் சில தவிசாளர்கள் கலந்து கொண்டனர். யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு வன்முறைகள் தொடர்பிலேயே இந்த கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர இதன்போது தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் எனது ஆளுமைக்கு கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன என தெரிவித்தார்.