முடங்குகிறது தமிழகம்..! அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி..!

ஜாக்டோ-ஜியோ என்பது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய கூட்டமைப்பாகும் . இந்த அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு தானாக முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் எனவும் முன்னதாக 1 லட்சம் ஆசிரியர்கள், வருகின்ற 4 ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளை எக்காரணத்தை கொண்டும் மூடக் கூடாது என்பது குறித்து தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை தமிழக அரசு அழைத்துப் பேசவில்லை.

எனவே வருகின்ற 4 ஆம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம். இந்த நிலையில் தமிழக அரசு எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடிக்கப்படும் என தமிழக அரசு எங்ககளை அச்சுறுத்துகிறது. என்ன நடந்தாலும் சரி, திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்.

இதையடுத்து வருகின்ற 13ம் தேதி சேலத்தில் “வேலை நிறுத்த ஆயத்த மாநாடு” நடத்தப்படும். பின்பு நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்.

இவ்வாறு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.