அனைத்திலும் மாஸ் காட்டும் அஜித்.!

நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, கல்லூரி மாணவர்கள் குழு உருவாக்கிய தக் ஷா என்ற ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று உலக நாடுகளுக்கு சவால் விட்டது.

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் மாநிலத்தில் இருக்கும் டால்பி நகரில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி கடந்த 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் பங்கேற்றன. அதில் இறுதிப்போட்டிக்கு 11 விமானங்கள் தேர்வுசெய்யப்பட்டன.

இதில் நடிகர் அஜீத்தை தொழில் நுட்ப ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் குழுவின் தக்ஷா விமானம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறது. 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்திற்கு சென்று அங்கு இருந்து ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை எட்டவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட போட்டியில், அதில் அஜீத் மாணவர் குழுவின் தக்ஷா விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் யூஏஎஸ் குழுவின் விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

இதில் விமானத்தின் பறக்கும் திறனைப் பொருத்தவரை தக்ஷா விமானம் 91 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் குழு விமானம் 88.8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றது. நேர்முக தேர்வு மற்றும் ஆய்வறிக்கை ஆகியவற்றிலும் தக்ஷா குழு சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், 0.85 மதிப்பெண் வித்தியாசத்தில் தக் ஷா விமானம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய நடுவர்களே காரணம் என்றும், அவர்கள் திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வெற்றியின் மூலமாக ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பெருமையை உலகறிய செய்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்த எம்.ஐ.டி.யின் ஏரோஸ்பேஸ் துறை பேராசிரியர் செந்தில்குமார், அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட இறுதிப்போட்டியை எட்ட முடியாத சூழலில் ஆஸ்திரேலியாவுடன் கடும் போட்டி நடந்ததாகவும், அதிக புள்ளிகள் பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய நடுவர்களின் நிறவெறி காரணமாக நேர்முக தேர்வில் மதிப்பெண் குறைக்கப்பட்ட சதியால் நமது மாணவர்கள் முதலிடத்தை எட்ட முடியாமல், இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக வருத்தத்தை தெரிவித்தார்.

விஸ்வாசம் படப்பிடிப்பில் இருப்பதால் குழுவுடன் செல்ல இயலாத நிலை அஜீத்திற்கு உருவானது. இருந்தபோதிலும் தினமும் பேராசிரியர்களையும், மாணவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை அளித்து வந்த அஜீத், வெற்றிக்காக தக் ஷா குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.