கருணாஸை சிறையில் அடைக்க முடியாது.! நீதிமன்ற உத்தரவு.!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ், காவல்துறையினரையும், தமிழக முதல்வரையும், மற்ற சமுதாயங்களையும் இழிவாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கருணாஸ் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவரை கைது செய்ய அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கமிஷனர் அலுவலகம் கடிதம் எழுதி இரு தினங்களுக்கு முன் அதிகாலை கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் கருணாஸ் ஜாமீன் மனுமீதான விசாரணையை இன்று (27.9.2018) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கருணாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக கருணாஸ் உள்ளிட்ட பலர் போராட்டம் செய்து இருந்தனர். இந்த போராட்டம் காவேரி விவகாரத்துக்காக நடந்தது. இந்த போராட்டம் தொடர்பாக தற்போது அவர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (27.9.2018 – 2.30 PM) சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த புதிய இரண்டு வழக்கில் கருணாஸ் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை விசாரணை செய்த நீதிமன்றம், ”ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியதாக எம்எல்ஏ கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிய போதிய முகாந்திரம் இல்லை என்றும், இந்த புகாரில் கருணாசை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்தும்” உத்தரவிட்டுள்ளது.

மேலும், ”ஐபிஎல் போட்டியின்போது தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கில் வரும் 4 ஆம் தேதி வரை கருணாசுக்கு நீதிமன்ற காவலில்” வைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் சற்று நேரத்தில் நடக்க உள்ளது.