விரைவில் எடப்பாடி கூடாரம் காலியாகிறது!

மதுரை வடக்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞரணி செயலாளர் பிரதீப்ராம்குமார் தலைமை தாங்கினார். அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியுடையவர் சசிகலா. அவரது முயற்சியால்தான் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திடம் சேர்ந்துகொண்டு கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டார்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கமி‌ஷன் அடிக்கும் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் இருக்கும் 1½ கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால் சிலர் பதவி சுகத்தில் இருந்து கொண்டு எங்களை விமர்சிக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தினகரன் அறிவிக்கும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலுக்கு பிறகு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும் என்றும் அவர் பேசினார்.