பைரவருக்கு என்ன கிழமை என்ன பூஜை செய்ய வேண்டும்?

எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது.

திங்கள் முதல் ஞாயிற்று கிழமை வரை உள்ள நாட்களில் பைரவருக்கு விரதமிருந்து வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தால் அனைத்து விதமான தடைகளும் அகலும்.

திங்கட்கிழமை

கடக ராசிக்காரர்கள் திங்கட்கிழமைகளில் வரும் சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர்மாலை அணிவித்து ஜவ்வரிசிப்பாயசம், அன்னம் படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும்.

செவ்வாய்க்கிழமை

மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை ராகுவேளையில் பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி, துவரம்பருப்புப் பொடி சாதம், செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும்.

புதன் கிழமை

மிதுனம், கன்னி ராசிக் காரர்கள் புதன் கிழமை மாலை, பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகுபூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம், பாசிப்பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர்.

புதன்கிழமை காலை 10.30- 12க்குள் பைரவருக்குச் சந்தனக்காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி, பாசிப்பயறு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோகவளர்ச்சி உண்டாகும்.

வியாழக்கிழமை

தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை ராகுவேளையில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, தாமரை மலர் மாலை சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் படைத்து அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும், தடையின்றியும் திருமணம் கைகூடும்.

சனிக்கிழமை

மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை

சிம்ம ராசிக்காரர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் 4.30–6.00 பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தள்ளிப்போகும் திருமணங்களின் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும்.

கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.