இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா – இங்கிலாந்து இணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, ரஹானே இருவரும் அரைசதம் அடித்து கை கொடுக்க, முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததில் முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்களும், குக் 29 ரன்களும், ஜென்னிங்ஸ் 20 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் கோலியின் சிறப்பான சதத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முதல் இன்னிங்சில் 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட கோலி 107 ரன்களும், புஜாரா 72 ரன்களும், ஹர்திக்பாண்டியா 52 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், குக் 17 ரன்னிலும், ஜோ ரூட் 13 ரன்னிலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 62 ரன்னுக்குள் இங்கிலாந்து முதல் நான்கு விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 169 ரன்கள் சேர்த்து இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை தந்தனர்.

அணியின் ரன் எண்ணிக்கை 231 ஆக இருக்கும்போது ஜோஸ் பட்லர் 106 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ், கிறீஸ் வோக்ஸ் ஆகியோரையும் பும்ரா வெளியேற்ற, தொடர்ந்து நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ்சை 62 ரன்களில் பாண்ட்யா வெளியேற்றினார்.

இறுதியில், நான்காம் நாள் ஆட்ட இறுதியில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.ரஷித்(30),ஆண்டர்சன்(8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் போட்டி துவங்கிய 10வது நிமிடத்தில் அஷ்வின் சுழலில் ஆண்டர்சன் வெளியேற,இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.