பிக் பாஸ் வீட்டில் மீண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. மும்தாஜுக்கு எதிராக மஹத் தலைமையிலான ஒரு கூட்டணி உருவாகிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
`பிக் பாஸ் வீட்டுக்குள் யாஷிகாவுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை அமைந்ததால், காதல் உணர்ச்சி மேலோங்கியது. இது இயல்பு. இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது. இதை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று சில சமயம் தோன்றும். இதனால்தான் தற்காப்பு மனநிலைக்குச் சென்றுவிட்டேன். யாஷிகா மீது எனக்கும் காதல் இருக்கிறது’ என்று மஹத் போட்டு உடைத்தார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த நேற்றைய சம்பவம் மஹத்தின் சொந்த வாழ்க்கையில் புயலைக் கிளப்பியுள்ளது. நேற்றைய எபிஸோடில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பதை ஒப்புக்கொண்டது தன்னைக் காயப்படுத்திவிட்டதாக மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
பிரச்சி மிஸ்ரா கடந்த 2012-ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டம் (Femina Miss India Earth 2012) பெற்றவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாள் முதலே பிரச்சியுடனான தன் காதல் குறித்து மஹத் கூறி வருகிறார். ஆனால், நேற்றைய எபிஸோடில் யாஷிகா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து பிரச்சி பகிர்ந்த பதிவில், “நான் மனதார காதலித்த மஹத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன். மஹத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வரை என்னைக் காதலித்தது உண்மை. ஆனால், இப்போது அப்படியில்லை. அவர் யாஷிகாவை காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, நான் மஹத்தை விட்டு விலக முடிவு செய்து விட்டேன். இனி மஹத்துடன் நான் இல்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் காயப்பட்டிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்க்கையை மாற்றிவிடாது. நான் என்னைப் பார்த்துக்கொள்வேன்.
மும்தாஜ் மஹத் மீது அக்கறை காட்டினார். ஜனனி மஹத் மீது உண்மையான நட்பை வெளிப்படுத்தினார். ஆனால், இவர்கள் இருவரையும் மஹத் மதிக்கவில்லை. மஹத் இனி என் வாழ்க்கையில் இல்லை. சமூக வலைதளங்களில் மஹத் குறித்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள். யாருடைய அனுதாபமும் எனக்கு வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.