காதலிக்கு மன்னிப்பு கேட்டு ரோட்டில் 300 பேனர்கள் வைத்த காதலன்!

மகராஷ்ட்ர மாநிலம் புனே அருகே காதலியிடம் மன்னிப்புக் கோருவதற்காக 300 இடங்களில் விளம்பர பேனர்களை வைத்து இளைஞர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மகராஷ்ட்ர மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் (Pimpri Chinchwad) என்ற நகரில், திடீரென ஆங்காங்கே ஷிவ்டே, ஐ ஆம் சாரி (Shivde, I am sorry) என்ற வாசகத்துடன், சிவப்பு நிற இதயத்தின் வடிவமும் இடம்பெற்ற விளம்பரத் தட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர்.

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இந்தத் தட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விளம்பரத் தட்டி வைத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காகேட்கர் (Khedekar) என்ற இளைஞர் தனது காதலியின் கோபத்தைத் தணிப்பதற்காக மன்னிப்புக் கோரி இந்தத் தட்டிகளை வைத்திருப்பது தெரிய வந்தது.

அனுமதியின்றி இந்தத் தட்டிகளை வைத்தற்காக அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.