நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த

சமாதான தீர்வை காண்பதற்காக  விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம்  நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம்  எழுதினேன்  என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு நான் செய்தியொன்றை அனுப்பினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் அப்பாவிகளை கொல்லவேண்டாம்,படையினரை தாக்கவேண்டாம், நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் உங்களை கொல்லவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை கொலைகள் தற்கொலை தாக்குதல்கள் படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.