தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் ஏழு தமிழர்கள்! முக்கிய நபர்களின் பெயர் இல்லை?

இலங்கையில் மீணடும் மரண தண்டனை அமுல்ப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை கடந்தவாரம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஒன்று சிறைச்சாலை திணைக்களத்தால் நீதியமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பெயர்ப் பட்டியலில் பாரியளிவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா, நவாஸ், ஜேசுதாஸன், கமிலஸ் மற்றும் சூசை ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சுக்கு அண்மையில் கையளிக்கப்பட்டுள்ள குறித்த பெயர்ப் பட்டியலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு தமிழர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.