காதலியை பார்க்க நள்ளிரவில் சுவர் ஏறி குதித்தவர் காலையில் கல்யாண மாலையோடு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் காதலியை சந்திக்க நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த இளைஞருக்கு குடும்பத்தினர் கூடி திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்கன்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷால் சிங் (25). ராணுவ வீரரான இவர் அருகிலுள்ள பரதிடா கிராமத்தைச் சேர்ந்த லஷ்மினா குமாரி என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்தின் போது சந்தித்துள்ளார்.

கண்டதுமே தமது காதலை அவரிடம் சொன்னார் இருவரும் காதலித்து வந்தனர். இது இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரிந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் ரகசியமாக சந்தித்து காதல் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்த விஷால் காதலியை சந்திக்க வழி தேடினார். இதனையடுத்து சினிமா பாணியில் இரவில் சுவர் ஏறிக் குதிக்க முடிவு செய்தார். காதலி எப்போதும் வீட்டுக்குள்தான் தூங்குவார். வீட்டில் உள்ளவர்கள் மொட்டை மாடியில் படுத்திருப்பார்கள் என்று எப்போதோ காதலி சொன்னது, ஞாபகத்துக்கு வந்தது. கடந்த புதன்கிழமை, காதலியின் ஊருக்குச் சென்று நள்ளிரவில் சுவர் ஏறிக் குதித்தார். பின்னர் கதவை தட்டி உள்ளே செல்ல முயன்றார்.

மொட்டை மாடியில் படுத்திருந்த ஒரு பெரியவர், சத்தம் கேட்டு எட்டிப் பார்த்திருக்கிறார். ஆள் யாரோ நிற்பது தெரிய, ‘திருடன், திருடன் என்று கத்தியுள்ளார். இதில் விழித்துக் கொண்ட அனைவரும் அலறியடித்து கீழே சென்று அந்த நபரைப் பிடித்து அடித்துது துவைத்துள்ளனர்.

இதைக் கண்ட காதலி குமாரிக்கு தாங்க முடியவில்லை. இதுக்குப் பிறகும் உண்மைய மறைக்கக் கூடாது என்று போட்டு உடைத்துவிட்டார் விஷால்.

தாம் குமாரியின் காதலன் எனவும் அவரை பார்க்கத்தான் வந்தேன் என்றதுமே குமாரி குடும்பத்தினர் அமைதியாகினர்.

இதனையடுத்து விஷாலின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு குடும்பமும் ஒரே சமூகம் என்பதால் திருமணத்திற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சம்பவம் நடந்த அடுத்த நாள் காலையிலேயே கல்யாணத்தையும் முடித்துவிட்டனர். இரண்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நள்ளிரவில் காதலியை பார்க்கப் போனவர் காலையில் கல்யாண மாலையோடு வீட்டுக்கு வந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சுவாரஸ்யமாகப் பேசப்பட்டு வருகிறது.