சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

பொங்கல் உணவு சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல் என இரு வகைப்படும். வெண் பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகின் றது.பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்யப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

பச்சையரிசி- 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 200 கிராம்
வெல்லம் – 1 கிலோ
பால் – 1/2 லிட்டர்
நெய் – 100 கிராம்
முந்திரி – 100
சுக்கு – சிறிது
ஏலக்காய் – 10
தேங்காய் – 1

தயார் செய்ய வேண்டியவை:

அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.

அரிசியும் பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.

அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். இப்பொழுது சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.