எங்கட நிலைமை வரவர மோசமாகிக்கொண்டே வருகுது எண்டதை நினைக்க ஆத்திரமாத்திரமாயெல்லே வருகுது. வக்கிர புத்தியும் அதுக்குப் பாதுகாப்பும் கிடைக்கிறதாலைதான் உது கட்டுப்பாடேயில்லாம வளருது. அப்பிடிச் சொல்லி ஆறவேண்டியதைவிட என்னதான் செய்யிறது? வயதுபோன பொம்பிளையளே வாழமுடியாத நல்லதொரு காலத்தைத்தானே கையிலை கொண்டு திரியிறம். ‘நல்லாட்சி’ நல்லபடியா நடக்கிறதுக்கு இதுகள் தேவையெல்லே? அவன் ஞானசாரதேரோக்குப் பிறந்தது மாதிரியான ஞானமாவது எங்கட ஆக்களுக்குப் பிறக்க எல்லாக் கடவுளையும் கும்பிடுவம். வேற என்னத்தைச் சொல்ல? என்னத்தைச் செய்ய?
போன கிழமை றெஜினா எண்ட பிஞ்சின்ர கதையோட போட்டுது. பேப்பர்களிலையும் முன்பக்கத்துக்குக் காணக்கூடியதாயிருந்ததல்லே? பிறகு போராட்டங்கள், அறிக்கையள் எண்டுவலு ஆர்ப்பரிப்போடைபோச்சுது பாருங்கோ! காட்டுப்புலத்தை ஒதுக்கான கிராமம் எண்டதைவிட ஒதுக்கப்பட்ட கிராமம் எண்டும் சொல்லலாம். அதுக்குக் காரணங்கள் கனக்கக் கிடக்குதெண்டு பொன்னாலை ராசலிங்கம் சொன்னது சரிதான்.
அரச, தனியார் நிறுவனங்களின்ர மற்றது சமயக்காறரின்ர உத்தியோகத்தர்மார் எத்தினைபேர் இந்தக் கிராமத்திலை முழுநேரமாய் வேலைக்கெண்டு இருக்கினம்? அது கிட்டத்தட்ட கிராமத்துச் சனத்தின்ர மூண்டுநாலு பேருக்கு ஒராள் எண்டுதான் இருக்கும். ஆனால் கசிப்பு, கஞ்சா உட்பட்ட போதைப் பழக்கங்கள், இளவயதுக் கலியாணம், பல தாரங்கள், முறைதப்பின உறவுகள் அதுவிதுவெண்டு சமூகத்துக்கு உதவாத அத்தனையும் உள்ள கிராமங்களிலை அதுவும் ஒண்டெண்டு சொல்லிப்போட்டு இருக்க முடியாதல்லே? இதுகளை மாத்திறதுக்கான யோசினையாவது ஏதாலுமிருக்கோண்டு தெரியாது.
அரசியல்வாதியள், அமைச்சர்மார், அதிகாரியள் ஆருமே அந்தக் குழந்தையின்ர கொலைக்குப் பிறகாவது அங்க போயிருக்கலாம். ஆனால், அப்பிடி நடக்கயில்லை. சனம் கொதி கொதியெண்டு கொதிச்சதாயல்லே பேப்பருகளிலை வந்தது. நான் முதல்ல சொன்ன மாதிரியான சமூகப் பிரச்சினையளாலையும் திட்டமிடாத வாழ்க்கை முறையாலையும் வறுமை கூத்தாடுகிற ஊரல்லே. அங்க போய் என்ன இலாபமெண்டு விட்டிருக்கலாம். ‘‘வித்தியா கொலையிலை சம்பந்தப்பட்டதுகள் பெரிய இடங்கள் எண்டதாலை எல்லாருமல்லே அடிச்சுப் பிடிச்சுக்கொண்டு முன்னுக்கு நிண்டவை’’ இது நானில்லை. கனகனின்ர கதை. காத்திகேசண்ணையும் அதைத்தான் சொல்லுறார்.
எல்லாருமிருந்தும் இல்லாத கிராமம். அங்ககூட சரியான தலைமைத்துவம் இல்லை. சொல்வழி கேக்கிற பழக்கம் பொதுவாயே எங்கட ஆக்களிட்ட இல்லைத்தானே. அங்கயும் அதுதான் நிலை. அந்தப் பிள்ளையின்ர கொலைக்கு நியாயம் கேட்டு ஒரு போராட்டத்தைக் கூடச் சரியாய் ஒழுங்கு செய்துகொள்ள முடியாத ஒரு சமூகமாயிருக்குது. கவலைதான். இதுகளை உணந்து சமூகத்துக்குள்ள தங்களையும் இணைக்கக்கூடியதாய் தங்களை மாற்றுகிற உணர்வையாவது பெறவேணும். உப்பிடியே இருக்கேலாதல்லோ?
எதிர்ப்புப் போராட்டம் செய்யிறதிலைகூடச் சரியாச் செய்யக்கூடிய சரியான வழிகாட்டலோ, ஒத்துழைப்போ கிட்டாத ளவுக்கு இருக்கிறது கவலைதான். போக்குவரத்தை மறிச்சு ஒரு எதிர்ப்போடை விழிப்பூட்டலையும் செய்யிறதைக்கூட வெறும் ஒரு காரைநகர் பஸ்ஸை மறிக்கிறதாலை செய்யேலுமோ எண்டு யோசிக்கயில்லை. சுழிபுரம் சந்தியிலை கூடுறதாலை வெளியுலகத்துக்குச் செய்தி எந்தளவு போகுமெண்டதைக்கூடக் கணிப்பிட முடியாமலிருந்ததைக் காணச் சரியான கவலையாயிருந்துது.
எங்கட ஆக்களின்ர பொறுப்புணர்ச்சி எண்டுறதுக்கு இது நல்ல உதாரணம். சிறுமி கொலைக்கு நீதிவேண்டியும் போதை எதிர்ப்புக்கும் எண்டுசொல்லி ஒரு கடையடைப்பும், கர்த்தாலும், பேரணியும் வெள்ளிக்கிழமை நடந்ததல்லே? அந்தப் பேரணிஅண்டைக்கு அத்தியாவசியப் பொருளுகள் விக்கிற எல்லாக் கடையளும் மூடியிருந்ததைக் காணக் கூடியதாயி ருந்துது. ஊர்வலம் ஏ.ஜி.ஏ ஒவ்பீஸ் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பாதையிலை சங்கானை பெருங் குடிமக்கள் தாகசாந்தி நிலையம் திறந்திருந்ததை எத்தினை பேர் பாத்திச்சினமோ தெரியேல்லை? மண்டிகைக் குளத்துக்கு முன்னாலை யிருக்கிற சாராயக்கடையைத்தான் சொல்லுறன். அது மட்டும் அண்டைக்குத் திறந்தி ருந்துது.
றிப்போட்டர்மார் ஆராவது படங்கிடமெடுக்கிறாங்களோ எண்டு பாத்தன். ஆனால், அவை முன்னாலை போய்நிண்டு முன் வரிசைக் காறரைத்தான் படமெடுக்கிறதிலை நண்டுவிட்டினம். ஆரோசிலர் பழைய பொற்காலத்தைத் திரும்பக் கேட்டதையாவது கவனிச்சுப் பெரிய எழுத்திலை போட்டாங்களே அது காணும். இந்த ஏற்பாட்டுக்காரர் செய்த ஏற்பாட்டுக் குறைபாட்டுக்கு இதுகும் ஓர் உதாரணம். இல்லையோ?
முதல்நாள் போராட்டத்துக்குப் பள்ளிக்கூடப் பிள்ளையளை அனுப்பேல்லையெண்டு அதிலை மெயின் றோட்டிலையிருக்கிற பெரிய பள்ளிக்கூடத்து அதிபரை வறுத்த ரீ.வீக் காரற்றை பொறுப்புணர்ச்சியை என்னவெண்டு சொல்ல. ‘‘பள்ளிக்கூடப் பிள்ளையை ஆற்றை பொறுப்பிலை, எப்பிடி இடைநேரம் வெளியாலை விடுகிறது எண்டுற விசயம் தெரியாத உங்களுக்கேன் சமூக அக்கறை?’’ எண்டு சீறின சின்னம்மாக்கான்ர கோவத்திலை நியாயமிருக்கோ இல்லையோ?
அந்தப் பிள்ளை தான் வதைபட்டுச் செத்து எங்களுக்குப் பெரிய செய்தியொண்டைச் சொல்லியிருக்கு. நாங்கள் எங்கட கிராம, பிரதேச மட்டச் செயற்பாடுகளுக்குக்கூடகச் சரியான ஒரு கட்டமைப்பில்லாம, சமூகத் தொடர்புகளில்லாம இருக்கிறம். எங்களை நம்பி, எங்களுக்காக, எங்கட வரிப்பணத்திலை ஊதியம் பெறுகிறவையாகட்டும், எங்கட வாக்காலை வாழ்க்கையை அனுபவிக்கிறவை, அறிக்கை விடுகிறவையாகட்டும் அவை எங்களுக்கானதைக் கவனிச்சுச் செய்யவைக்கிற ஆளுமையான தலைமைத்துவத்தையும் அமைப்புகளையும் நாங்கள் ஆக்கிவைச்சிருக்க வேணும். பிள்ளையின் உயிர் போனதுக்குப் பிற்பாடாவது அதாலை கிடைச்சிருக்கிற படிப்பினையை விளங்கிக் கொள்ளுவமா?