இரவில் போனில் பேசிய மகள்: கழுத்தை நெரித்து கொன்ற தகப்பன்

பஞ்சாப் மாநிலத்தில் மகள் தனியாக இரவில் கைப்பேசியில் பேசி கொண்டிருந்ததால் தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள குர்னே கர்ட் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகளை சந்தேகப்பட்டு கொன்றிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு அனைவரும் தூங்கியபின்னும் கைப்பேசியில் அவரது மகள் குல்வந் கவுர் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

ஏற்கனவே தனது மகள் அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலிக்கிறார் என்ற சந்தேகத்தில் இருந்த அவரது தந்தை ஜோகா சிங் அவரது மகளை கையும் களவுமாக பிடிப்பதற்காக கவுர் பேசி கொண்டிருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறார்.

அதன் பின்னர் ஆத்திரம் தலைக்கேறிய நொடியில் கவுரின் துப்பட்டாவை கொண்டு அவரது கழுத்தை நெரித்து கொன்ற ஜோகா சிங் பின்னர் எதுவும் நடக்காதது போல அமைதியாக வந்து படுத்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த உண்மையை அறிந்த பின் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து புத்லடா டிஎஸ்பி ராச்பால் சிங், அப்பெண்ணின் கழுத்தை நெரித்த அடையாளங்கள் அவரது உடலில் காணப்படுவதால் அவரது தந்தை ஜோகா சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.