மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான அறிக்கையின் சி 350 ஆவது பக்கத்தை வெளிப்படுத்துவதால் விசாரணைகளுக்கு பாதிப்பில்லை என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
பிணை முறி தொடர்பான முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே இதுவரையில் வெளியாக்கப்படாத விசாரணை அறிக்கை பக்கங்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவினால், இதுவரையில் வெளியாக்கப்படாதிருந்த சீ 350 முதல், சீ 360 வரையான பக்கங்கள், ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன.
இதனை சபாநாயகர் குறித்த தினத்தில் நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சபைக்கு தெரியப்படுத்திய போது, அதனை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
எனினும், குறித்த அறிக்கையின் ஒரு பகுதி மாத்திரமே கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே அதனை சபைப்படுத்த முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.