புலிகளை நினைவேந்திய வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் சர்வதேச தரப்பிற்கு முன்வைத்த கருத்தினை ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதிக்கின்றனரா? வடக்கில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை, நினைவுத்தூபி அமைத்தமை என்பன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக நாட்டு மக்களுக்கு கூற வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியுள்ளனர்.
வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஜனாதிபதி உடனடியாக வடமாகாண சபையை கலைத்து நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்கினேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
வடக்கில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற நினைவேந்தல் நிழல்வுகள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்கள் குறித்து தமது நிலைப்பாட்டினை கூறும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இது குறித்து கூட்டு எதிர்க்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகையில்,
வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் சர்வதேச தரப்பிற்கு முன்வைத்த கருத்தினை ஜனாதிபதியும் – பிரதமரும் அனுமதிக்கின்றனரா என்பதை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். வடக்கில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியமை, நினைவுத்தூபி அமைத்தமை என அனைத்துமே அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெறுகின்றதா என்பதையும் கூற வேண்டும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வாய் திறக்காது அமைதி காத்தால் இந்த நாடு மீண்டும் தீப்பற்றி எரியக்கூடிய நிலைமை ஏற்படும்.
பயங்கரவாதிகளை கொண்டாடும் , அவர்களுக்காக நினைவேந்தல் நடத்தும் உலகின் ஒரே ஒரு நாடு இலங்கை மட்டுமேயாகும். உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் அவ்வாறு பயங்கரவாதிகள் போற்றப்படுவதில்லை. பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தி யுத்தத்தை முடித்த மஹிந்த ராஜபக் ஷவை கள்வன் என கூறுகின்றனர். அரசாங்கம் இன்று பிரிவினைவாதிகளின் பக்கம் நின்றே தீர்மானம் எடுக்கின்றது. ஆகவே அரசாங்கத்தை சாடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. மக்கள் அடுத்த கட்டமாக என்ன தீர்மானம் எடுக்கப்போகின்றனர் என்பதே முக்கியமானதாகும். மக்கள் இனியும் இந்த ஆட்சியினை அனுமதித்து நாட்டினை துண்டாட இடமளிக்கப்போகின்றனரா அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்வருவார்களா என்பதை நாமும் பார்த்துகொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
பீரிஸ் கருத்து
இது குறித்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் கூறுகையில்,
இன்று நாட்டில் மிகப்பெரிய இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளன. வடக்கில் தமிழ் பிரிவினைவாதம், கிழக்கில் முஸ்லிம் பிரிவினைவாதம் என நாட்டின் மக்களை நாசமாக்கும் சக்திகளை அரசாங்கமே உருவாக்கியுள்ளது. வடமாகாண முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் இன்று முன்வைக்கும் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை.
வடக்கு கிழக்கு தனி இராஜ்ஜியம் உருவாக்கப்படுவது, சர்வதேச தலையீடுகள், இராணுவத்தை வெளியேற்றுவது போன்ற கருத்துக்களை அவர்கள் தைரியமாக முன்வைக்கக் கூடிய நிலைமையை இன்று அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புலிகளை நினைவு கூரவும் நினைவுத்தூபி அமைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகள் அனைத்தையும் ஜனாதிபதியும் பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் பாரிய அபிவிருத்தி, மற்றும் பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். இன ஒற்றுமையை உறுதிப்படுத்தினோம். ஆனால் இந்த அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் மீண்டும் பழைய நிலைமைகளை உருவாக்கியுள்ளது. மீண்டும் வடக்கில் இனவாத சக்திகள் தலைதூக்கி வடக்கு கிழக்கினை துண்டாடும் நிலைமைகள் உருவாகியுள்ளது.
புலிகள் வடக்கிற்கு தேவை என்ற கருத்துக்களை வெளிப்படையாக கூறும் நிலைமை வடக்கில் உருவாகியுள்ளது. வடமாகாண சபையில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது, பாடசாலைகளில், கடைகளில், வீடுகளில் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே நிறைவேற்று அதிகாரங்கள் இன்றும் ஜனாதிபதி கைகளில் உள்ளது. எனவே வடக்கின் நிலைமைகளை எந்த வகையிலேனும் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அதிகாரங்களை கொண்டு உடனடியாக வடமாகாண சபையை கலைக்க வேண்டும். அத்துடன் நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரிவினையை தூண்டும் விக்கினேஸ்வரன்,மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.