சர்வதேச ஊடகத்தில் சிந்தனையாளராக இடம் பிடித்த புலிகளின் தலைவர்!

சர்வதேச ஊடகமான பி.பி.சி தமிழ் சேவையில் நேற்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சிந்தனைக்கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

பி.பி.சி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி தனது தமிழ்ச் சேவையில் தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்றைய தினம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் சிந்தனையை வெளியிட்டிருந்தது.

“வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது” என்ற மேதகு வே.பிரபாகரனின் சிந்தனையை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பி.பி.சி ஊடகம் பிரபாகரனின் புகைப்படத்துடன் பதிவேற்றியுள்ளது.

மேலும், சர்வதேச ஊடகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட முதல் அங்கீகாரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.