ரத்தத்தைச் சுத்திகரிக்கும், உடல் பருமன் குறைக்கும், வயிற்றுப்புண் ஆற்றும்… கிரீன் பிளட்!

`விலையில்லாமல் கிடைக்கும் பொருள்கள் எல்லாம் வீணானவை’ என்ற எண்ணம் பல நல்ல விஷயங்களை நம்மிடமிருந்து தள்ளி வைத்துவிடுகிறது. இந்த எண்ணம், பல நேரங்களில் ஆரோக்கியத்தையும் நம்மிடமிருந்து எட்டிப்போக வைத்துவிடுகிறது. பூமியில் தோன்றும் அனைத்து உயிர்களுக்குமான தேவைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது இயற்கை. மனிதர்களுக்கும் அப்படித்தான். ஆனால், ஓரறிவு படைத்தவை முதல் ஐந்தறிவு படைத்தவை வரை அனைத்து உயிர்களும் இயற்கை உருவாக்கி வைத்திருப்பதை உணர்ந்து, தேவையான நேரத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டும்தான் இயற்கையின் பெருங்கருணையைப் புரிந்துகொள்வதேயில்லை.

அறுகம்புல்

மருத்துவமனைகளுக்குச் சென்று ஆரோக்கியத்தைப் பேணுவது செயற்கை. மூலிகைகள்மூலமாக ஆரோக்கியத்தைப் பேணுவதுதான் இயற்கை… விலையில்லா மருத்துவம். இலவசம் என்பதற்காக, மனிதர்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தை ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி வைத்திருக்கவில்லை இயற்கை. உங்கள் காலுக்கடியில், சாலையோரங்களில், காலியிடங்களில் எனக் காணும் இடங்களிலெல்லாம் ‘இதோ உன் நோய்க்கான தீர்வாக நான் இருக்கிறேன். என்னைப் பயன்படுத்திக்கொள்’ என வேண்டுகோள் வைத்துக்கொண்டேயிருக்கின்றன பலவிதமான மூலிகைகள். அவற்றில் முக்கியமானது `அறுகு’, `அருகு’ என்றெல்லாம் சொல்லப்படும் அறுகம்புல்.

பூஜையில் கணபதி

`சிறிய புல்தானே’ என அறுகம்புல்லைச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுகிறோம். பிள்ளையார் கோயிலுக்குப் போகும்போது மட்டும் அறுகம்புல்லைக் கொஞ்சம் மரியாதையாகப் பார்க்கிறோம். அவ்வளவுதான் அறுகம்புல்லுக்கும் நமக்குமான தொடர்பு. ஆனால், `இதை தினமும் பயன்படுத்தினால் பல்வேறு நோய்கள் உங்கள் அருகில் வரவே அஞ்சி ஓடும்’ என்கிறது சித்த மருத்துவம். அதனால்தான் ‘ஆனதுக்கும் ஆகாததுக்கும் அறுகம்புல்’ எனச் சொலவடைச் சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள். அந்த நோய், இந்த நோய் என இல்லாமல் அனைத்து நோய்களுக்கும் இது பயன்படும் என்பதுதான் சொலவடையின் பொருள். இன்றைக்கு முக்கியப் பிரச்னைகளாக இருப்பவை, ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரைநோய், புற்றுநோய். இந்த நான்கு நோய்களால்தான் அதிகம்பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நான்கு நோய்களுக்குமான தீர்வு அறுகம்புல்லில் இருக்கிறது.

அறுகம்புல் சாறுதான் அந்த அருமருந்து. `தினமும் காலையில் இதை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்’ என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்தச் சாற்றில் உள்ள மகிமையை அறிந்துகொண்டதால்தான், இதனை ‘கிரீன் பிளட்’ எனக் கொண்டாடுகிறார்கள் வெளிநாட்டினர். இதற்கு இணையாக ரத்தத்தை சுத்திகரிக்கும் மாமருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை என்கிறார்கள்.

 பாலுடன் அறுகம்புல் ( கிரீன் பிளட்)

அறுகம்புல்லைப் பறித்து, நன்றாகக் கழுவி, தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் ஆகியவை சரியாகும். சளி, சைனஸ், மூட்டுவலி பிரச்னைகளும் தீரும். அறுகம்புல்லை அரைத்து, பசும்பாலில் போட்டு, சுண்ட காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் பலப்படும். எத்தனை பலவீனமான உடலும் தேறிவிடும். ஒரு கைப்பிடி அறுகம்புல்லை எடுத்து, அரைத்து, 200 மி.லி காய்ச்சாத பசும்பாலில் கலந்து, ஒரு மண்டலம் குடித்து வந்தால் ரத்த மூலம் கட்டுப்படும்; நரம்புத் தளர்ச்சி நீங்கும்; ஆண்மைக் குறைபாடு நீங்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

இத்தனை நோய்களுக்குமான தீர்வை தன்னுள் வைத்திருப்பதால்தான் இதை `புற்களின் அரசன்’ என்கிறார்கள். இனியாவது அறுகம்புல்லைப் பயன்படுத்துவோம். நோயற்றப் பெருவாழ்வு வாழ்வோம்.