பெண்கள் அழகை பேணிக் காக்கும் கிர்ணி பழம்!

கோடை காலங்களில் அதிகம் அருந்தும் பழரசம், கிர்ணி பழரசம் மட்டுமே. மலிவாக கிடைக்கும் இப்பழம் உடல் குளிர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கிறது.

அது தவிர இந்த கிர்னிப்பழம் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கிறது எனும் தகவல் ஆச்சர்யம் தருகிறதா.. கிர்ணி பழத்தில் உள்ள புரதமும் கொழுப்பு சத்தும் பெண்களின் புற அழகிற்கு உதவி செய்கிறது.

வறண்ட சருமம் உடையவர்கள் கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் ஒவ்வொரு தேக்கரண்டி எடுத்து கலந்து சருமத்தில் தடவினால் தோல் மிருதுவாகும்.

கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து பவுடர் செய்து அதில் 100 கிராம் எடுத்துக் கொண்டு அதனுடன் ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து மேலும் சிறிது வெள்ளரி ஜுஸ் கலந்து பசை பதத்திற்கு கொண்டு வந்து முடி முதல் பாதம் வரை இந்தப் பசையை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் குளியல் போல் குளிர்ச்சியாகவும் நறுமணமாகவும் இருக்கும்.

கோடையில் ஏற்படும் வியர்வையால் முகம் களையிழந்து இருக்கும், கிர்ணிப்பழத்துண்டு எடுத்து மசித்து அதனை முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாகும்.

நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீவக்காய் இரண்டையும் கால் கிலோ அளவில் சேர்த்து மூன்றையும் அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வர, கூந்தல் சுத்தமாவதோடு அதன் பளபளப்பும் கூடும்.

இரண்டு ஸ்பூன் வெள்ளரி சாறுடன் , இரண்டு ஸ்பூன் கிர்ணிப்பழ விழுது , 4 (அ) 5 துளிகள் எலுமிச்சைச்சாறு ஒன்றாக ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து வெளியில் செல்கையில் இதனை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். இந்த சென்ட் 2 – 3 மாதங்கள் வரை கெடாது. சருமத்திற்கும் கேடு விளைவிக்காது வேண்டும் என்றால் பன்னீர் சேர்க்கலாம்.

பெண்களில் ஒரு சிலருக்கு கை, கால், மற்றும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும் , இதற்கு கிர்ணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து ஒன்றாக கலந்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தேவையற்ற முடிகளை நீக்கி சருமத்தை மிருதுவாக்கும். இதில் ஆவாரம் பூ என்பது சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

சோர்வான கண்கள் உடையவர்கள் பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சமமாக எடுத்து, நீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசிய பின் 5 நிமிடம் கழித்துக் கழுவவும் இதன்மூலம் கண்களை ஒட்டிய சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு, கண் கருவளையம், மற்றும் சோர்வு நீங்கி, கண்கள் நட்சத்திரம் போல பிரகாசிக்கும்.

கடுகு எண்ணெய்யுடன், கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பாதம் பாடல்களில் வருவது போல் பஞ்சு போல் மிருதுவாகும்.