சென்னையில் காதலி வீட்டுக்குச் சென்ற ஃபேஸ்புக் காதலனுக்கு நேர்ந்த துயரம்..!

காதலன்

வடசென்னையில் காதலி வீட்டுக்குச் சென்ற ஃபேஸ்புக் காதலன், திடீரென இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னையைச் சேர்ந்தவர் கார்த்திகா (பெயர் மாற்றம்). இவர் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன். 24 வயதான இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆட்டோ மொபைல்ஸ் இன்ஜினீயரிங் படித்துள்ளார். பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்து வந்தார்.

இந்நிலையில் தென்னவனும் கார்த்திகாவும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இந்த நட்பு, காதலாக மலர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 2-ம் தேதி கார்த்திகாவுக்குப் பிறந்த நாள். அந்த விழாவில் தென்னவன் பங்கேற்றுள்ளார். தென்னவனை நண்பன் என்று பெற்றோரிடம் கார்த்திகா அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த 30-ம் தேதி கார்த்திகாவின் பெற்றோர், கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டனர். இதனால் கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தத் தகவலையறிந்த தென்னவன், கார்த்திகாவின் வீட்டுக்கு வந்துள்ளார். கார்த்திகா சமைத்த பிரியாணியை விரும்பிச் சாப்பிட்டுள்ளார் தென்னவன். அதன் பிறகு, நடந்தச் சம்பவம் கார்த்திகாவை அதிர்ச்சியடைய வைத்தது. திடீரென தென்னவனுக்கு வலிப்பு ஏற்பட பீதியில் உறைந்தார் கார்த்திகா. அதற்குள் தென்னவன் மயங்கிவிட்டார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தகவல் கிடைத்ததும், போலீஸார் தென்னவனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாகப் போலீஸார் விசாரித்துவரும் நேரத்தில் தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் தற்போது வீட்டுக்குத் தெரியவந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.