ரஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் விடுதலை!

முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை குற்றவாளியான முருகன் பிறிதொரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகனை வேலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

வேலூர் சிறைச்சாலைக்குள் முருகன் தொலைபேசி பயன்படுத்துவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, இரண்டு கைபேசிகளும், இரண்டு சிம் அட்டைகளும், மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வேலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

வழக்கில் தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கோரிக்கை முன்வைத்த நிலையில், அதற்கான அனுமதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாமாக வாதாடிய முருகன், 7 அரசு தரப்பு சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.

இதன்போது முருகனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் அரச தரப்பினால் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் சிறைச்சாலைக்குள் முருகன் கையடக்க தொலைபேசி பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.