ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான தேசிய அரசாங்க ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இரு தரப்பு ஒப்பந்தத்தை மீள்கைச்சாத்திட்டு தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கான இணக்கப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டமைக்கு அமைவாகவே குறித்த ஒப்பந்தம் இவ்வாரத்தில் கைச்சாத்திடப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதனடிப்படையில் புதிய அமைச்சுக்களுக்கான அமைச்சர் தெரிவுகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
7 ஆம் திகதி திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்யப்பட உள்ளது. மறுநாள் 8 ஆம் திகதி கூட உள்ள 8 ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி விசேட உரையினை நிகழ்த்த உள்ளார்.
இதன் போது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கடந்த 2015ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியானது.
நீண்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் இந்த ஒப்பந்தத்தை தொடர்வது குறித்து இருதரப்பிலும் எவ்விதமான கருத்துக்களும் தெரிவிக்கப்பட வில்லை.
இந்நிலையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை தெடர்வது குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இதனடிப்படையிலேயே புதிய அமைச்சரவை குறித்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
ரவி கருணாநாயக்க , விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தினால் பதவி விலகினார்.
அதே போன்று அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறிய குற்றச்சாட்டை அடுத்தும் விஜேதாச ராஜபக்ஷ பதவி விலகினார்.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் மீண்டும் அமைச்சரவைக்கு உள்வாங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
அத்துடன் திலக் மாரப்பன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தொடர்ந்தும் அதே அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு அமைச்சு கைமாறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.