தந்தையின்றி கஷ்டப்பட்டு மகனை வளர்த்த தாய்… ஈவு இரக்கமின்றி அடித்துக் கொன்ற மகன்

திருப்பூரில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாயை அவரது மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் ராமுடன் வசித்து வந்தார். ராம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, ராம் தாயிடம் கூறி வந்துள்ளார். அவரது தாயும் அதற்கான முயற்சிகளை செய்து வந்துள்ளார்.

நேற்று வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ராம், தனது தாயிடம், தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பெற்ற தாய் என்று பாராமல், வீட்டில் இருந்த கடப்பாரையால் தாயை கடுமையாக தாக்கினார். இதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலே பலியானார்.

விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தாயையே மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.