ஐயா வணக்கம்! கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இன்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் டுவிட்டரில், ஜயா, வணக்கம் கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன்… இது மாண்புகு பிரதமருக்கு நான் அனுப்பு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது இல்லை. தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதி வழங்கப்பட்டாகி விட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். இது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும், அது உங்கள் கடமை, நினைவுறுத்த வேண்டியது என் உரிமை.

இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், தயவுசெய்து செயல்படுங்கள். இந் நிலை மாற வழி செய்யுங்கள், வாழ்க இந்தியா, நீங்களும் என பதிவிட்டுள்ளார்.