பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க!

மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன.

இந்த பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகள்

மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும்.

எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் ஏற்படும் தீய விளைவுகளை தவிர்க்கலாம்

மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

அதேபோல ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்ததாக சொல்லப்படுகின்றது.

அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.

பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே.

அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

இவ் ஆலயங்களிற்கு சென்று வழிபடுவதன் மூலம் கந்திருக்ஷ்டியால் ஏற்படுகின்ற தீயவிளைவுகள நாம் தவிர்த்துக்கொள்ளலாம்.