க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளவர்கள் யார் தெரியுமா?

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆறு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெற்றன.

இந்த நிலையில், நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

நேற்றிரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஆறு இடங்களில் முதன்மை நிலைகள் பதிவாகி உள்ளன.

தமிழ் மொழிமூலத்தில் யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கண்டி மஹமாயா மகளிர் கல்லூரி மாணவி லிமாஷா அமந்தி விமலவீர, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் லந்தி லக்பிரியா மற்றும் இரத்தினபுரி சீவலீ மத்திய மகா வித்தியாலய மாணவன் கவீஷ ப்ரதீபாத் ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 8 ஆயிரத்து 8224 பேர் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், 9 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆயிரத்து 739 ஆல் அதிகரித்துள்ளது.

கணித பாடத்தில் 2016 ஆம் ஆண்டு 62.81 வீதமானோர் சித்தியடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு அந்த 67.24 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 69.94 வீதமானோர் தெரிவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டில் குறித்த எண்ணிக்கை 73.05 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு இன்று முற்பகல் 10 மணியின் பின்னர் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும இன்றைய தினம் பரீட்சை பெறுபேறுகள் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான தகவல்களை றறற.ளழழசலையகெஅநெறள.டம என்ற எமது இணையத்தள முகவரி ஊடாகவும், என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாகவும் பார்வையிடலாம்.