ஒரே இருக்கையில் நீண்ட நேரமாக அமர்ந்திருக்கும் செயற்பாடு, ஆபத்தான நோய்களுக்கு வழிவகுப்பதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. உடற்பயிற்சியினை ஊக்குவிப்பதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டுவரும் மருத்துவர் ஒருவரே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் தேசிய புற்று நோய் நிறுவகத்தின் தொற்று நோய் மருத்துவரான சாள்ஸ் ஈ மத்தியூஸ் (Charles E Matthews) என்பவரே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாம் உட்கார்ந்திருக்கும் நேரத்தினை வெகுவாகக் குறைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மணித்தியாலக் கணக்காக அமர்ந்திருப்பது ஒன்பது வகையான புற்று நோய்களுடன் தொடர்புபடுவதாக எச்சரித்துள்ளார்.மேலும் இந்த விடயம் தொடர்பில் நாம் நினைத்ததைவிட அதிகமான உடல் செயற்பாடு தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மணித்தியாலம் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது மார்பக புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. ஆனாலும், அதனைவிடவும் தலை கழுத்து, நுரையீரல் உள்ளிட்ட ஒன்பது வகையான புற்று நோய்களை இந்தச் செயற்பாடு ஊக்குவிக்கின்றது என அவர் பரபரப்புடன் எச்சரித்துள்ளார்.கடந்த சனிக்கிழமையன்று நடந்த மாநாடு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு உள்ளோமோ அங்கெல்லாம் சுறுசுறுப்பான சிந்தனைகளையே பேணவேண்டும் என்றும் அதற்கேற்றாற்போல் சுறுசுறுப்பான நடத்தைகளைக் காட்டவேண்டும் என்றார். வீட்டில் இருக்கின்ற நேரத்தில் இருந்து செய்யக்கூடிய வேலைகளை இருந்தவாறே செய்யாமல் ஏதாவது அசையும் நடவடிக்கைகளுடன் செய்யலாம் எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதாயின் ஏதாவது வேலை அல்லது உடற்பயிற்சி செய்துகொண்டு பார்க்கவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உட்கார்ந்திருக்கும் செயற்பாடு உடலுக்கு நல்லதல்ல எனக் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நடத்தையானது விரைவான இறப்பினைத் தூண்டவல்ல நோய்களான இதய நோய் மாரடைப்பு வகை 2 நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் வழுக்கி விழுதல் மூளை நோய்கள் சுவாச நிலைமைகள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புபடுவதாக இருபது பேரைக் கொண்டு மேற்கொண்ட இந்த ஆய்வில் குறிப்பிட்டார்.
மனிதர்கள் ஒரு பகல் நாளில் அறுபது சதவிகிதத்தை இருப்பதற்காகவே பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கை மாறவேண்டும் எனவும் ஒரு நாளில் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மணித்தியாலத்தையேனும், கடுமையான உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவேண்டும் எனவும் மேற்படி மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .