ஃபோன் வெடித்துச் சிதறி இளம் பெண் மரணம் : என்ன ஃபோன் தெரியுமா?

இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர் சமீபத்தில் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார்.

அப்போது போனில் சார்ஜ் குறைந்ததன் காரணமாக, உடனடியாக சார்ஜ் போட்ட நிலையிலேயே போன் பேசியுள்ளார். இதனால் போன் திடீரென்று வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறியுள்ளது.

இதை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைகள் மற்றும் உடலின் சில பாகங்களில் காயங்களோடு அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் கூறுகையில், எங்கள் வீட்டு உறவினர்களிடம் அவள் சார்ஜ் போட்ட நிலையில் பேசிக் கொண்டிருந்துள்ளாள்.

திடீரென்று போன் வெடித்ததால், அவள் சுயநினைவற்று மயங்கினாள். உடனடியாக நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதும் எந்த பயனும் இல்லை.

அவள் பயன்படுத்திய போன் நோக்கிய நிறுவனத்திற்கு சொந்தமான போன் எனவும் 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Nokia 5233 தான் அது என்று கூறியுள்ளார்.

இது குறித்து நோக்கியாவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த தகவலை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் உண்மை நிலை அறியடம் அதற்கு காரணம் தங்கள் நிறுவனத்தின் போன் தான் என்றால் எதன் காரணமாக இது ஏற்பட்டது என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.