ஹேக் செய்யப்பட்ட ஏர் இந்தியா ட்விட்டர் கணக்கு..!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரபூர்வ  ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

அரசு இணையதளங்களை முடக்கம் செய்வது மற்றும் அதில் தவறான தகவல்களைப் பதிவேற்றம் செய்வது போன்ற சம்பவங்கள், சில மாதங்களாக அதிகமாக அரங்கேறி வருகின்றன. இதேபோன்று நேற்றிரவு, ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரபூர்வ  ட்விட்டர் பக்கம்,  சில மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. மேலும் அதில்,“கடைசி நிமிட அறிவிப்பு, அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இனி, நாம் அனைவரும் துருக்கி ஏர்லைன்ஸில் பயணிப்போம்” என்று பதிவிடப்பட்டு, அது முதலாவதாக இருக்குமாறும் வைக்கப்பட்டிருந்தது.

இது, சில துருக்கிய அமைப்புகளால் முடக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், அந்தப் பக்கத்தில் துருக்கிக்கு ஆதரவாக சில புகைப்படங்களும் பதிவிடப்பட்டிருந்தன.  ட்விட்டர் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள், அதிலிருந்து சில முக்கிய தகவல்களையும்
திருடியுள்ளனர். சிறிது நேரம் இயங்காமல் இருந்த ட்விட்டர் பக்கம் மீண்டும் இயங்கத் துவங்கியது.