சென்னை அயனாவரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் கடந்த 2 வாரங்களில் போலீஸ்துறையைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்ச்சியாக நடந்துள்ளது. முதலில் சென்னை, ஆவடி வீராபுரத்தில் மத்திய துணை ராணுவப்படை பயிற்சி போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரைவிட்டார்.
இரண்டாவதாக கடந்த ஞாயிறு அன்று அதிகாலையில் சென்னையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த துயர சம்பவம் நெஞ்சைவிட்டு அகலும் முன்பு சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் (வயது 33) என்பவர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார். சென்னையில் அடுத்தடுத்து இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்து போலீஸ் வட்டாரத்தை உலுக்கிவிட்டது.
சென்னை அயனாவரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதை பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் கடந்த 2011-ம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வானார்.
கடந்த 4-10-2014 முதல் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பாக பணியாற்றி வந்தார்.
ரவுடிகளை ஒடுக்குவதிலும், பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் அவர் சிறப்பாக பணியாற்றியதாக அயனாவரம் பொதுமக்களிடம் பாராட்டை பெற்று வந்தார்.
அவர் நேர்மையான அதிகாரியும் கூட. நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை அவர் பணியில் இருந்தார். அதன்பிறகு அவர் வசிக்கும் சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பு வீட்டிற்கு சென்று விட்டார். நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் அவர் அயனாவரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இரவு ரோந்து பணிக்காக வந்தார். அவர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரிடம், ‘உங்களுடைய பணிதான் முடிந்துவிட்டதே, இப்போது ஏன் மீண்டும் வந்துள்ளர்கள்?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சதீஷ்குமார் வீட்டில் தூக்கம் வரவில்லை. அதனால் போலீஸ் நிலையத்திற்கு வந்தேன் என்று தெரிவித்தார்.
உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ரோந்து பணிக்காக சென்றார். அவர் போனபிறகு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்று அங்கு இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவியிடம், ‘எனது கைத்துப்பாக்கியை பெட்டியை திறந்து எடுத்து கொடுங்கள்’ என்று கேட்டார்.
உங்கள் பணிதான் முடிந்துவிட்டதே, ஏன் மீண்டும் வந்து துப்பாக்கியை கேட்கிறீர்கள்? என்று கேட்ட சிரஞ்சீவி துப்பாக்கியை கொடுக்க மறுத்துள்ளார்.
நான் ரவுடிகளை பிடிக்கும் விசேஷ பணிக்காக வந்துள்ளேன். எனது துப்பாக்கி கண்டிப்பாக வேண்டும் என்று சதீஷ்குமார் சற்று கோபத்தோடு, அதட்டலாக கேட்டார். உடனே பெட்டியை திறந்து சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி கைத்துப்பாக்கியை எடுத்து சதீஷ்குமாரிடம் கொடுத்துள்ளார்.
அந்த துப்பாக்கி ‘9 எம்.எம். பிஸ்டல்’ ரக கைத்துப்பாக்கியாகும். துப்பாக்கியை வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் திடீரென்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
நான் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப் போகிறேன் என்று குறிப்பிட்டார். அதைக்கேட்ட சிரஞ்சீவி, ‘என்ன விளையாடுகிறீர்களா? சார்’ என்று கேட்டார்.
உண்மையிலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள போகிறேன் என்று, சதீஷ்குமார் துப்பாக்கியை தலையில் வைத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவி துப்பாக்கியை அவரிடமிருந்து பிடுங்க முயற்சித்தார்.
உடனே சதீஷ்குமார், சிரஞ்சீவியின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கியைக் காட்டி, ‘நீங்கள் விலகிச் செல்லுங்கள், இல்லாவிட்டால் உங்களை சுட்டுவிடுவேன்’ என்று சதீஷ்குமார் மிரட்டினார்.
இதைப்பார்த்து பதறிப்போன சிரஞ்சீவி விலகிச் சென்றுவிட்டார். நான் மன உளைச்சலோடு உள்ளேன் என்னை யாரும் தடுக்காதீர்கள், என்று கூறிக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் போலீஸ் நிலைய வாசலுக்கு வந்து, வலதுபக்க காதுக்கு மேலே துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுக் கொண்டார்.
குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சதீஷ்குமார் அதே இடத்தில் பரிதாபமாக பலியாகிவிட்டார். அப்போது அதிகாலை 2 மணியை தாண்டிவிட்டது.
இதை எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் அயனாவரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்த சதீஷ்குமாரின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார். அந்த கேமராவில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியிருந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் ஒரு கடிதம் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை பார்த்தபோது, அது சதீஷ்குமாரே எழுதி வைத்திருந்தார். ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் சதீஷ்குமாரின் அண்ணன் கணேஷ்குமாரின் செல்போன் நம்பரும், அவரது சித்தி மகனின் செல்போன் நம்பரும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சதீஷ்குமார் திடீரென்று இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரே என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்திருந்தாலும், சாவதற்கு முன்பு அவர் மன உளைச்சலோடு இருந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
அந்த மன உளைச்சலுக்கு என்ன காரணம்? என்று உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டன.
உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த தொல்லை காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் அதுபற்றி ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை.
சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 33 வயதை தொட்டிருக்கும் அவருக்கு இன்னும் ஏன் திருமணம் நடக்கவில்லை? அதில் ஏதாவது பிரச்சினை இருக்குமா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக போலீஸ் துறையில் பணியாற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணிச்சுமை அதிகமாக உள்ளது என்றும், உயர் அதிகாரிகள் தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் பொதுவான குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள்.
இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இந்த துயர சம்பவங்கள் சென்னை போலீசையே சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.
சதீஷ்குமார் போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகளை தட்டிக்கொடுத்து, ஊக்கப்படுத்தி வேலை வாங்கவேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.