இறுதி சடங்கினை நிகழ்த்த வந்த ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர்!

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஸ்ரீதேவியின் மகன் அர்ஜுன் கபூர் மும்பை வந்தடைந்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவி(54), நேற்று துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரவு 11.30 மணியளவில்  ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அகால மரணமடைந்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல், அனில் அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீதேவியின் உடலுக்கு உரிய மரியாதையும் அஞ்சலியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்கும், அவரது முதல் மனைவி மோனா கபூருக்கு பிறந்த மகன் அர்ஜுன் கபூர், தன்னுடைய மாற்றாந்தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்னேரே மும்பை வந்தடைந்தார்.

ஸ்ரீதேவிக்கு அர்ஜுன் கபூருக்குமான உறவு, அவ்வளவு சுமுகமானதாக இல்லை என்று ஆரம்பத்தில்  சொல்லப்பட்டாலும், ஒரு நேர்காணலில் அதை மறுத்தார் அர்ஜுன் கபூர். இந்நிலையில் அர்ஜுன் கபூர் அனைத்து இறுதி சடங்குகளையும் மகனாக ஸ்ரீதேவிக்கு செய்வார் என்பது அனுமானிக்கபடுகிறது.