வீட்டில் சமைத்த உணவு நஞ்சாகியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய காத்தான்குடி 3இல் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமது இரவு உணவை உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மயக்கமுற்ற நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் சமைத்த உணவில் மீனின் பாகங்களைக் கொண்ட கறி உட்பட ஏனைய உணவுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அலுவல்கள் பிரிவு தெரிவித்துள்ளது.






