ஓயாமல் தொடரும் எனது சேவைகள் : அங்கஜன் எம்.பி

எத்தகைய தடைகள் வந்த போதும் தமிழ் மக்களுக்கான எனது சேவைகள் எந்த வேளையிலும் ஓயாமல் தொடரும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தனது தலைமைக்கு மதிப்பளித்து சிறந்த அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு;

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே! எனது அரசியல் யுகப்பயணத்திலே பல ஆண்டுகளாக என்னோடு கைகோர்த்து வெற்றிப் படிகளை அடைய பலம் சேர்த்தவர்கள். மக்களுடைய துன்பங்களே எப்போதும் என்முன்னே பிம்பங்களாக நிழலாடும்.உங்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவனாகவும் உன்னதமான உயிரோட்டமான முறையில், தமிழ் மக்களுக்கான எனது சேவை எந்நேரத்திலும் ,எச்சந்தர்ப்பத்திலும் தொடரும் என்பதை இந்த நேரத்தில் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.

தேசியக்கதைகள் பேசி, எமது நேர்த்தியான பயணத்தை திசைதிருப்புவதோடு மட்டுமல்லாமல் தடைக் கல்லாக இருந்தவர்களுக்கு, இன்று மக்கள் எமக்கு எமது சேவைகளை, எமது உண்மையான உணர்வுகளை புரிந்து இவ் மாபெரும் ஆணையை வழங்கி இருப்பது, எமது பயணத்திற்கான அங்கீகாரமே2018 ஆம் ஆண்டு இவ் உள்ளூராட்சி சபை தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக எனது தலைமையிலான முதலாவதான பிரவேசத்திலேயே முரணான கருத்துக்களை முறியடித்து புதிய அபிவிருத்தி இலக்குகளை அடைய கூடிய வகையில் மக்கள் தடம் பதியப்பெற்றிருக்கின்றது.

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே சுயநலவாதிகளின் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கி பன்மடங்கான ஆதரவை வழங்கியதன் மூலம், எனது தலைமையில் 37 பிரதேச சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.எம்மை உங்கள் நிதர்சனமான கண்ணோட்டத்திலே உணர்ந்து, உன்னதமான வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள்.எனது செயலாற்றலுக்கு இவை மேலும் உந்துதலை வழங்குகின்றன.

நிச்சயம் எனது சேவைகளும் உணர்வு ரீதியாக தமிழ் மக்களுக்காக தொடரும் அதே வேளை, சுதந்திரமான தேசியப் பயணத்திற்காக ஆணையிட்டு அங்கீகாரம் வழங்கியமைக்கு எனது சேவை செயலாக்கம் பெறும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.என் உள்ளேயும் தமிழ் மற்றும் தேசிய உணர்வு அதிகமாகவே இருக்கின்றது எனபதை என் அகத்தை அறிந்த நீங்களே மனச்சாட்சியாக வழங்கியுள்ளீர்கள்.

தேசியம் எனும் போர்வையில் பலர் தடைகளை ஏற்படுத்திய போதும், சற்றும் தளராது, இலட்சியப்பயணத்தில் இணைந்த உங்களினால் அவை சாத்தியமாவதுடன், உங்கள் இலக்குகளை நோக்கிய எனது அபிவிருத்தி அம்புகள் இலக்குகளை நோக்கி வெற்றி அம்புகளாகப் பாயும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.