உள்ளூராட்சி சபை தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச ஊடகங்கள் பலவும் மகிந்தவின் வெற்றியை பிரதான தலைப்பு செய்திகளாக வெளியிட்டுள்ளன.
அந்த வகையில், இந்திய ஊடகமான என்.டி.வி வெளியிட்டுள்ள செய்தியில் “மகிந்தவின் ஆதரவை பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண சமகால அரசியலில் பாரிய வெற்றியினை பதிவு செய்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தமையின் காரணமாகவே மகிந்த ராஜபக்சவிற்கு மக்கள் ஆதரவினை வழங்கியுள்ளனர்” எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய ஊடகமான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளானது ஆளும் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இது அரசாங்கத்தினை பரீசீலனைக்குட்படுத்தும் நடவடிக்கையாகும். தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளுக்கும் இடையிலான உறவானது நலிவடையலாம்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, டைம்ஸ் ஒப் இந்தியா, தி ஹிந்து, பெஸ்ட் போஸ்ட், டைம்ஸ் நவ், நிவ்யோர்க் டைம்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்களும் மகிந்தவின் வெற்றியை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.